விருந்துக்கு அழைத்து தங்கையை தீர்த்து கட்டிய அண்ணன்.. எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

கும்பகோணம் : காதல் திருமணம் மலிந்துவிட்ட இந்த சூழலில் ஆணவக்கொலையும் நடப்பது சமூகத்தில் நிறைந்திருக்கும் முரண் என சமூக ஆர்வலர்கள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்திவருகின்றனர். இந்நிலையில் கும்பகோணம் பகுதியில் நடந்த ஒரு ஆணவக்கொலை தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

கும்பகோணம் துலுக்கவேலி பகுதியை சேர்ந்தவர் சேகர். இவருக்கு சக்திவேல் (31) என்ற மகனும் சரண்யா (24) என்ற மகளும் உள்ளனர். சரண்யா நர்சிங் படிப்பை முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக வேலைபார்த்து வந்தார். பணிபுரியும் இடத்தில் பழக்கமான திருவண்ணாமலை பொன்னூரை சேர்ந்த மோகன் என்பவருடன் காதல் வசப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் சேகரின் உறவினர் ஒருவருக்கு சரண்யாவை திருமணம் செய்துவைக்க பேசியுள்ளனர். அப்போது அவர் மோகனை காதலிப்பதாக கூறியுள்ளார். அவன் வேறு ஜாதி நாம் வேறு ஜாதி என கூறி குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே சரண்யாவுக்கு திருமண ஏற்பாடுகளை செய்ய குடும்பத்தினர் தீவிரமாக இறங்கினர்.

அதையடுத்து குடும்பத்தினர் ஒத்துக்கொள்ளமாட்டார்கள் என்பதை அறிந்த சரண்யா கடந்த சில தினங்களுக்கு முன்னர் மோகனுடன் சென்னையில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டுள்ளார். பிறகு பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளார். அவர்கள் தங்கள் ஆத்திரம் தீர திட்டியுள்ளனர். இதற்கடுத்த மூன்று நாளில் சரண்யாவை அவரது அண்ணன் சக்தி போனில் அழைத்துள்ளார்.

உனக்கும் மாப்பிள்ளைக்கும் விருந்துவைக்கவேண்டும் என மிக அன்பாக பேசி தங்கையை ஊருக்கு அழைத்துள்ளார். இதை நம்பிய சரண்யா மற்றும் மோகன் தம்பதியினர் கும்பகோணம் வந்தனர். துலுக்கவேலியை அடைந்த அவர்கள் வீட்டு வாசலை நெருங்கிய போதுதான் புதுமணத்தம்பதிகளுக்கு அந்த கொடூரம் அரங்கேறியது.

சரண்யாவின் அண்ணனான சக்திவேல் அவரது உறவினருமான தேவணஞ்சேரி ரஞ்சித் என்பவரும் புதுமணத்தம்பதிகளை அரிவாளால் சராமாரியாக வெட்டினர். இதில் நிலைகுலைந்த புதுமணத்தம்பதியினர் ரத்தவெள்ளத்தில் சரிந்து துடிதுடிக்க இறந்தனர். தகவலறிந்த சோழபுரம் போலீசார் விரைந்துவந்து சடலங்களை கைப்பற்றினர். மேலும் தலைமறைவாக இருக்கும் ரஞ்சித் மற்றும் சக்திவேலை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். விருந்து என அழைத்து புதுமணத்தம்பதிகள் ஆணவப்படுகொலை செய்யப்பட சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது.