கஞ்சா வழக்கு போடுவதாக மிரட்டி கற்பழித்த காவலர்..! இளம் பெண் பரபரப்பு புகார்..

0
Follow on Google News

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் உணவகம் நடத்திவரும் இளம் பெண்ணை கஞ்சா வழக்கு போடப்போவதாக மிரட்டி காவலர்களே கற்பழித்த அவலம் தமிழ்நாட்டில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏற்கனவே லஞ்சப்புகார் லாக்கப் மரணங்கள் என காவல்துறையின் பெயர் சீர்கெட்டு போயிருக்கும் இந்த நிலையில் காவலர்களே கற்பழிப்பில் ஈடுபட்டது பரபரப்பை கிளப்பியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பீமாண்டப்பள்ளியை சேர்ந்தவர் நிஷா வயது 25 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அந்த பகுதியில் தனது கணவருடன் தாபா ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் அந்த பெண் கடந்த 4ம் தேதி ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். சூளகிரி காவல்நிலையத்தில் பணிபுரிந்துவரும் இரு காவலர்கள் தன்னை மிரட்டி உடலுறவு கொண்டதாக தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த புகாரில் ” சூளகிரி போலீஸ் ஸ்டேஷனில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வரும் முருகானந்தம் மாரியப்பன் ஆகிய இருவரும் நான் நடத்தி வரும் தாபாவிற்கு அடிக்கடி வருவார்கள். வரும்போதெல்லாம் சாப்பாடு வாங்கி செல்வார்கள். அதோடு நில்லாமல் பணம் லஞ்சமாக கேட்டு தொல்லை தருவார்கள்.

பணம் கொடுக்கவில்லை என்றால் தாபா உணவகத்தில் கர்நாடாகாவிலிருந்து கடத்திவரப்பட்ட மதுபாட்டில்களை விற்பனை செய்கிறோம் என்றும் கஞ்சாப்பொட்டலங்களை வைத்து எப்.ஐ.ஆர் போட்டு சிறையில் தள்ளிவிடுவோம் என்றும் கூறி என்னை பயமுறுத்தி இருவரும் என் சம்மதம் இல்லாமல் உடலுறவு கொண்டுவிட்டனர். அவர்கள் இருவர்மீதும் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

அந்த தாபா பெண்ணின் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் காவலர்களான முருகானந்தம் மற்றும் மாரியப்பன் இருவர்மீதும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் 376(2) மிரட்டல் விடுத்தல் ஆகிய இரு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தயே உலுக்கியுள்ளது.