நிறவெறி காரணமாக புஜாராவை ஸ்டீவ் என அழைத்த அணி நிர்வாகத்தினர்… அடுத்தடுத்து கிளம்பும் பூதம்!

0
Follow on Google News

ஆசிய வீரர்களிடம் நிறவெறிப் போக்கு… மைக்கேல் வாஹ்ன் மீது எழுந்த குற்றச்ச்சாட்டு! இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹ்ன் மீது அஜீம் ரஃபிக் மற்றும் அதில் ரஷித் ஆகிய வீரர்கள் நிறவெறிக் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹ்ன் இங்கிலாந்து அணியின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன்களில் ஒருவர். ஓய்வு பெற்ற பின்னர் கிரிக்கெட் விமர்சகராகவும் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். இந்திய அணியின் மீதும் குறிப்பாக கேப்டன் விராட் கோலி மீதும் கடுமையான விமர்சனங்களை வைத்து இந்திய ரசிகர்களுக்கு பிடிக்காத ஒரு நபராகவே இப்போது அறியப்படுகிறார்.

இந்நிலையில் இவர் உள்ளூர் அணியான யார்க்ஷயர் அணிக்காக விளையாடிய போது ஆசிய வீரர்கள் மீது நிறவெறியோடு நடந்துகொண்டதாக அந்த அணிக்காக விளையாடிய வீரர் அஜீம் ரஃபிக் குற்றம் சாட்டியுள்ளார். யார்க்ஷ்யர் அணியில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த நான்கு வீரர்களையும் பார்த்து ‘நீங்கள் (ஆசியர்கள்) அதிகமாக இருக்கிறீர்கள்.’ என்று கூறி அவர்களை ஒரு போட்டியிலும் சேர்ந்து விளையாட முடியாதபடிக்கு செய்துள்ளார்.

மேலும் அவரின் நிறவெறி பாகுபாடுகளால் தான் தற்கொலை வரை சென்றதாக அஜிம் ரஃபீக் கூறியுள்ளார். ரஃபீக்கின் இந்த குற்றச்சாட்டுகளை இப்போது இங்கிலாந்து அணிக்காக ஆடிவரும் சுழல் பந்து வீச்சாளர் அதில் ரஷீத்தும் உறுதி செய்துள்ளார். இதையடுத்து ரபீக் தெரிவித்துள்ள மற்றொரு தகவல் இந்திய ரசிகர்களையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் புஜாராவும் அந்த அணிக்காக விளையாடினார். அப்போது அவருக்கே தெரியாமல் அவரும் அந்த அணி நிர்வாகத்தினரால் நிறவெறியால் பாதிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் புஜாரா அளித்த ஒரு நேர்காணலில் என் பெயரின் முதல் வார்த்தையை சொல்ல முடியாததால் ஸ்டீவ் என்று அழைத்தனர் எனக் கூறியிருந்தார்.

ஆனால் ஸ்டீவ் என அழைத்ததே நிறவெறியால்தான் என ரஃபீக் கூறியுள்ளார். ’ஆசிய வீரர்கள் அல்லது வெள்ளையர் அல்லாதவர்களை ஸ்டீவ் அல்லது கெவின் என்று சொல்லிதான் அழைப்பார்கள். ஆனால் நாம் அவமதிக்கப்படுவது நமக்கே தெரியாது’ எனக் கூறியுள்ளார்.