ராகுலை மீண்டும் பஞ்சாப் அணியில் எடுப்போம்… பயிற்சியாளர் கும்ப்ளே தகவல்!

0
Follow on Google News

ராகுலை ஏலத்தில் பஞ்சாப் அணிக்காக எடுப்போம் என பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே எல் ராகுலுக்குதான் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பணமழை கொட்டப் போகிறது. ஏனென்றால் இப்போது அவர் விளையாடிக் கொண்டிருக்கும் பஞ்சாப் அணி அவரைத் தக்கவைக்க விரும்பியும் ஏலத்தில் பங்கேற்கப் போவதாக அறிவித்து வெளியில் வந்துள்ளார்.

புதிதாக உருவாகும் லக்னோ அணிக்காக அவரை எடுத்து கேப்டனாக நியமிக்க வேண்டுமென அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் அவருக்காக 20 கோடி ரூபாய் வரை தர முன்வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை ஐபிஎல் தொடரில் எந்தவொரு வீரரும் இவ்வளவு தொகைக்கு ஏலம் போனதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் ஐபிஎல் தொடருக்கான ஏலம் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பஞ்சாப் அணியில் இருந்துகொண்டே லக்னோ அணி நிர்வாகத்தோடு அவர் பேரத்தில் ஈடுபட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி பேசியுள்ள பஞ்சாப் அணி நிர்வாகி நெஸ் வாடியா ‘ராகுல் அவ்வாறு செய்திருந்தால் அவர் பிசிசிஐ விதிகளின் படி தண்டிக்கப்பட வேண்டும்’ எனக் கூறியுள்ளார். இதனால் கே எல் ராகுலுக்கு ஓராண்டு ஐபிஎல் விளையாட தடை விதிக்கப்படலாம் என சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ள கருத்தில் ‘ நான்கு ஆண்டுகளாக எங்கள் அணியில் கே எல் ராகுல் முக்கிய வீரராக இருக்கிறார். அவரை நாங்கள் தக்க வைக்கவே விரும்பினொம். ஆனால் அவர் ஏலத்துக்கு செல்ல விரும்பினார். ஒவ்வொரு வீரருக்கும் அதற்கான உரிமை உள்ளது. ஏலத்தில் அவரை நாங்கள் எடுத்து மீண்டும் பஞ்சாப் அணிக்கு விளையாட வைப்போம்’ எனக் கூறியுள்ளார்.