பாபி டச் கோல்ட் யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் என்கிற படத்தயாரிப்பு நிறுவனம் நடிகர் ரவி மோகன் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. பாபி டச் கோல்டு யுனிவர்சல் நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் ரவி மோகன் 2 படங்களில் நடிக்க கடந்த ஆண்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக அவருக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு அதில் 6 கோடி ரூபாய் முன்பணம், அந்த தயாரிப்பு நிறுவனம் தந்துள்ளது.
ஆனால் முன்பணத்தை வாங்கிக் கொண்ட நடிகர் ரவி மோகன் இதுவரை அந்த நிறுவனத்திடம் ஒப்புக்கொண்டபடி அவர்களது படத்தில் நடிக்கவில்லை. மேலும் வாங்கிய முன்பணம் 6 கோடி ரூபாயையும் பலமுறை தயாரிப்பு நிறுவனம் கேட்டும் திருப்பித் தரவில்லை. இதையடுத்து பாபி டச் கோல்டு யுனிவர்சல் தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குனர் பாலச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் ரவி மோகன் மீது வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் தங்களிடம் வாங்கிய முன்பணம் 6 கோடி ரூபாயை வட்டியுடன் திருப்பித் தரக்கோரி அந்த மனுவில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கேட்டுக் கொண்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தயாரிப்பு நிறுவனத்திடம் வாங்கிய முன்பணம் 6 கோடி ரூபாய்க்கு, சொத்துக்கான உத்தரவாதத்தை அதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிட்டனர்.
ஆனால் கோர்ட் உத்தரவின்படி குறிப்பிட்ட தேதிக்குள் நடிகர் ரவி மோகன் தரப்பில் இருந்து சொத்து ஆவணங்களை கோர்ட்டில் சமர்பிக்கவில்லை. மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நடிகர் ரவி மோகன் சொத்து ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பிக்காததால் அவரது சொத்துக்களை முடக்க அனுமதி கேட்டு எதிர் தரப்பு வக்கீல் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து நடிகர் ரவி மோகனின் சொத்துகளை முடக்க மனுதாக்கல் செய்ய கோர்ட் அனுமதி வழங்கியது.
இதையடுத்து நடிகர் ரவிமோகனின் சொத்துக்கள் முடக்கப்படலாம் என்கிற சூழல் உருவாகி உள்ளது. தனது மனைவி ஆர்த்தியுடன் ஏற்கனவே பிரிவை அறிவித்த நடிகர் ரவி மோகன், இப்போது விவாகரத்து கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. மனைவி ஆர்த்தியை பிரிந்த பிறகு, நடிகர் ரவி மோகன் சென்னையில் இருந்து மும்பைக்கு குடிபெயர்ந்து விட்டார்.
இப்போது தனியாக மும்பையில் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும் நடிகர் ரவி மோகன் கூறியிருக்கிறார். அதனால் ஆர்த்தியுடன் நடிகர் ரவி மோகன் வாழ்ந்த வீட்டுக்கு உரிமை கோருவது தொடர்பாகவும், வங்கி தவணையை கட்டுவது தொடர்பாகவும் மனைவி ஆர்த்தியுடன் நடிகர் ரவி மோகன் பேச்சுவார்த்தை தொடந்து நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடிகர் ரவி மோகனின் சொத்துகளை முடக்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய இந்த சூழலில், நடிகர் ரவி மோகன் தனது மனைவியுடன் வாழ்ந்த வீட்டை வங்கி நிர்வாகம் ஜப்தி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பங்களாவில் தன் மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகளுடன் முதலில் வசித்தார்.
மனைவியை பிரிந்த பிறகு கடந்த பல மாதங்களாக அந்த வீட்டுக்கு செல்லாமல் இருந்தார். பேங்க் தவணையும் செலுத்தாமல் இருந்தார். இந்த சூழலில் அந்த வீட்டை ஜப்தி செய்யப் போவதாக பேங்க் நிர்வாகம் தரப்பில் நோட்டீஸ் ஒட்டப்பட உள்ளதாகவும் பகீர் தகவல் வெளிவந்துள்ளது. நட்சத்திர நடிகரான ரவி மோகனுக்கு இப்படி ஒரு நிலமையா என ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

