கொரோனா மூன்றாம் அலை எச்சரிக்கை.! கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் என்ன செய்ய வேண்டும்.?

0
Follow on Google News

ஊரடங்கினால் இப்போது கொரோனா தொற்று குறைந்து வருகின்றது. இதன் அர்த்தம் என்னவென்றால் ஊரடங்கு தளர்த்தப்பட்டால் தொற்று அதிகரிக்கும் என்பதுதான். அதாவது பொதுமக்கள் அனைத்து நிலைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைபிடிப்பதும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதும் மட்டுமே உண்மையில் தொற்றைக் குறைக்கும். மூன்றாம் அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மூன்றாம் அலையின் தாக்கத்தையும் பாதிப்பையும் குறைக்க நாம் இப்போதே தயாராக வேண்டும் என்று தமிழ் நாடு அரசின் முன்னாள் பொதுசுகாதார இயக்குனர் டாக்டர் க.குழந்தைசாமி கேட்டுக்கொண்டார். மத்திய அரசின் புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலகமும் விழுப்புரம் மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டமும் இணைந்து நடத்திய கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையை எதிர்கொள்ளுதல் மற்றும் தடுப்பூசியின் அவசியம் என்ற காணொலி கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றியபோது டாக்டர் குழந்தைசாமி இவ்வாறு தெரிவித்தார்.

கர்ப்பிணிகளை கொரோனா தொற்று ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளை வீட்டார் மட்டுமே நடத்திக் கொள்ள வேண்டும். உறவினர்கள், அண்டை அயலார் கூட வரக்கூடாது. பிரசவத்துக்குப் பிறகு குழந்தையைப் பார்க்கக் கூட யாரும் வரவேண்டாம். பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். கிராமத்தில் குடும்ப விசேஷ நிகழ்ச்சிகள் மூலம்தான் குடும்பம் குடும்பமாகத் தொற்று ஏற்படுகிறது. கோவிட்-19 இரண்டாம் அலையின் தாக்கம் இருக்கும் வரை தனித்து இருப்பதும் விசேஷங்களைத் தள்ளிப் போடுவதும் அவசியம் என்று டாக்டர் குழந்தைசாமி மேலும் தெரிவித்தார்.

சென்னை பத்திரிகைத் தகவல் அலுவலகம் மற்றும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் ஆகியவற்றின் கூடுதல் தலைமை இயக்குனர் மா.அண்ணாதுரை தலைமை உரை ஆற்றினார். இன்றைய நெருக்கடியான சூழலில்தான் அறிவியல் மனப்பான்மையின் தேவை உணரப்படுகின்றது. பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளை மக்கள் புறந்தள்ள வேண்டும். அறிவியல்பூர்வமான உண்மையான தகவல்களை அடிக்கடி பகிர்ந்து கொள்ள வேண்டும். வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கிராமத்தில் இருக்கும் செவிலியர் மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்று அண்ணாதுரை கேட்டுக் கொண்டார்.
.
புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலக துணை இயக்குனர் திரு. தி.சிவக்குமார் கடந்த 10 நாட்களில் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 6100 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் சுமார் 50 மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்றும் தெரிவித்தார். காணொலி கருத்தரங்கில் அங்கன்வாடிப் பணியாளர்கள், வளர் இளம் பெண்கள் மற்றும் கிராம மகளிர் என சுமார் 650 பேர் கலந்து கொண்டனர்.