வேஷ்டி, சட்டை அணிந்தால் கேவலமா.? விராட் கோலி சொந்தமான இடத்தில் தமிழனுக்கு நடந்த உச்சகட்ட அவமானம்…

0
Follow on Google News

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் விராட் கோலி. நடந்து முடிந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஏராளமான சாதனைகளை நிகழ்த்தினார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 49 சதங்கள் அடித்திருந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து, அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தினார். இதே போன்று உலகக் கோப்பை தொடரில் 765 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதும் பெற்றார்.

இதைத் தொடர்ந்து தற்போது ஓய்வில் இருக்கும் விராட் கோலி தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இடம் பெறவில்லை. அவர், டெஸ்ட் தொடரில் மட்டுமே இடம் பெற்றுள்ளார். விராட் கோலி கிரிக்கெட் மட்டுமல்லாமல் பல்வேறு தொழில்களையும் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக ஆடை விற்பனை மற்றும் ஹோட்டல் தொழில்களை இந்திய முழுக்க மேற்கொண்டு வருகிறார்.

இவர் நடத்தி வரும் “One 8 Commune” என்ற ஹோட்டல் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் உள்ளது. முதலில் பெங்களூருவில் தொடங்கிய இந்த ஹோட்டல், அடுத்தடுத்து மும்பை, ஐதராபாத், டெல்லி உள்ளிட்ட நகரங்களிலும் கிளைகள் திறக்கப்பட்டது. இந்திய அணியின் பல்வேறு வீரர்களும் இவரது ஹோட்டலில் அவ்வப்போது சென்று உணவருந்தி புகைப்படங்களை வெளியிடுவார்கள். அதேபோல் பிரபலங்கள் பலரும் அவரது ஹோட்டலுக்கு செல்வது வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் மதுரைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமான ராம் என்பவர் மும்பைக்கு சென்ற போது, விராட் கோலியின் ஹோட்டலில் உணவருந்த சென்றுள்ளார். நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்தாலும் அந்த ஹோட்டல் உணவை தவிர்த்து, விராட் கோலியின் பெயருக்காகவே சாப்பிட சென்றுள்ளார். இதற்காக பிரத்யேகமாக புதிய வேஷ்டி, சட்டை அணிந்து சென்றுள்ளார். ஆனால் ஹோட்டலுக்குள் சாப்பிட உள்ளே செல்ல முயன்ற போது, ஹோட்டல் நிர்வாகிகள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அவரை அனுமதிக்க முடியாது என்று கூறியதோடு, இந்த டிரஸ் கோடு-க்கு அனுமதியில்லை என்று கூறி வெளியேற்றியுள்ளனர். இதையடுத்து ஹோட்டல் முன்பாக நின்று, இதனை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “நான் நிற்பது விராட் கோலி சாரின் ஒன் 8 உணவகம். இவ்வளவு தூரம் வந்தும் இப்படி ஒன்று நடந்தது ரொம்ப கஷ்டமா ஆயிருச்சு. நான் மும்பைக்கு வந்த உடனே அருகில் உள்ள உணவகம் ஒன்றில் தான் தங்கியிருந்தேன்.

ஆனால் அங்கு கூட சாப்பிடாமல் விராட் கோலியின் உணவகத்தில் சாப்பிடுவதற்காகத்தான் வந்தேன். புத்தம் புதிய ராம்ராஜ் வேஷ்டி கட்டித்தான் இங்கு வந்துருக்கேன். அப்படி இருந்தும் அங்குள்ளவர்கள். சாரி சார் உங்க ட்ரெஸ் கோடு சரியில்லை என்று கூறி அனுமதி மறுத்துவிட்டனர். வருத்தத்துடன் நான் திரும்பிச் செல்கிறேன். இது தொடர்பாக அவர்கள் ஆக்‌ஷன் எடுப்பார்களா? என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால், இது போன்று இனிமேல் நடக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

லுங்கியோ, ட்ரவுசரோ அணிந்து உள்ளே சென்று அனுமதி மறுத்தால் கூட பரவாயில்லை. ஆனால் ஒரு தமிழ் அடையாளத்துடன் பசியுடன் வந்திருக்கும் எனக்கு அனுமதி மறுத்தது கஷ்டமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், வேஷ்டி அணிந்து உணகத்திற்குள் செல்ல முயன்ற இளைஞருக்கு அனுமதி மறுத்தற்கு பல்வேறு தரப்பினரும் கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும், விராட் கோலியின் ஒன் 8 உணவகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிலர் கோரிக்கை வைத்து வருகின்றனர்