தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் ஒரு கலைஞராக வலம் வரும் கமல்ஹாசன் சொந்த வாழ்க்கையில், அவரது அரசியல் வாழ்க்கையில் பலவிதமான விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் ஆளானவர். குறிப்பாக திருமண வாழ்க்கை சக நடிகைகளுடன் இருந்த நெருக்கமான நட்பு அவரது கடவுள் மறுப்பு கொள்கை சமீபகாலமாக அரசியலில் அவரது நிலைப்பாடு என பல விமர்சனங்களில், சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
அதுவும் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவங்கிய ஆரம்ப காலத்தில் திமுக ஆட்சியை வாரிசு அரசியலை டார்ச் லைட்டை வீசி டிவியை உடைத்த கமல்ஹாசன், இப்போது ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் தீவிர விசுவாசியாக மாறி கடந்த பார்லிமென்ட் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரமும் செய்தார். அரசியலில் டம்மியாக மாறிய கமல், சினிமாவில் அவர் புகழ் இன்னும் மங்காமல் மறையாமல் இருப்பதால் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் தக்லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் பேசிய கன்னட நடிகர் சிவராஜ்குமார், நான் கமல்ஹாசனின் மிக தீவிரமான ரசிகன். அவரது கண்கள் சிரிப்பு முகம் ரொம்பவும் ரசிப்பேன். அவர் நடித்த படங்களில் முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிடும் அதி தீவிரமான ரசிகன். ஒருமுறை என்னை அவர் கட்டிப் பிடித்தார். அதனால் 3 நாட்கள் நான் குளிக்காமல், அவரது உடல் வாசனையுடன் நான் இருந்தேன் என்று மிகவும் பெருமையாக சந்தோஷமாக பேசினார்.
இந்த விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், சிவராஜ்குமார் குடும்பம் என் குடும்பம் போல. அவர் பேசும் மொழியும் தமிழிலிருந்து பிறந்தது என்று குறிப்பிட்டார். இந்த கருத்து இப்போது கர்நாடகாவில் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. தமிழிலிருந்து பிறந்த மொழி என கன்னடத்தை நடிகர் கமல்ஹாசன் குறைத்துப் பேசியதாக கூறி சமூக வலைதளங்களில் கமலுக்கு எதிராக விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
6.5 கோடி கன்னட மக்களின் உணர்வை புண்படுத்தும் வகையில் கமல் பேசி விட்டதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். கமல்ஹாசனின் இந்த பேச்சை கண்டித்து கன்னட ரக்சனா வேதிகை உள்ளிட்ட பல அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. தமிழ் கன்னடத்தை விட சிறந்தது என கூறுவது முழுமையாக தவறானது எனக் கூறிய அவர்கள், அத்தகைய கருத்து கூறும் நடிகரின் படங்களை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க கூடாது எனவும் கொதித்துப் போய் எச்சரித்துள்ளனர்.
மேலும் கர்நாடகா பாஜக தலைவர் விஜயேந்திரா, கன்னடத்தின் 2500 ஆண்டு கால பாரம்பரியத்தை கேள்விக்குள்ளாக்குவது மிகவும் கவலை தருகிறது. கமல் நீங்கள் கன்னடத்தில் நடித்திருந்தாலும் இப்போது நன்றி மறந்து அவமதிக்கிறீர்கள் என்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். இப்படி கன்னட மக்கள் மத்தியிலும் அரசியல் கட்சிகள் தரப்பிலும் கமல் சொன்ன கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் தக்லைஃப் திரைப்படத்தின் வெளியீட்டை எதிர்த்து கர்நாடகாவில் போராட்டங்கள் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இயக்குனர் மணிரத்னம் மற்றும் தயாரிப்பாளர்கள் இந்த விவகாரத்தால் இப்போது தலை சுத்தி போய் இருக்கின்றனர் கமல்ஹாசன் தேவையில்லாமல் தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என்று பேசியது இப்போது கன்னட மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு அலையை உருவாக்கி உள்ளது.
இதனால் தக்லைஃப் படம் கர்நாடகாவில் ரிலீஸ் என்பதில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. விண்வெளி நாயகன் இப்படி வில்லங்கமாக பேசி விவகாரத்தை கிளப்பி விட்டுட்டாரே என்று தக்லைஃப் படக்குழுவினர் கவலையில் உள்ளனர்.