மனைவி மீது சந்தேகம்.. கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை செய்த கணவன்.. திருநெல்வேலியை உலுக்கிய சம்பவம்..

0
Follow on Google News

திருநெல்வேலி : இளம்பெண் ஒருவர் அவரது வீட்டில் சந்தேகத்துக்குரியவகையில் சரமாரியாக வெட்டப்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்ததைப்பார்த்த அண்டைவீட்டினர் அதிர்ச்சியடைந்த சம்பவம் நெல்லை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து வந்த போலீசார் உடலைமீட்டு பிரேதபரிசோதனைக்கு பாளையம்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

நெல்லைமாவட்டம் மானூர் தெற்கு வாகைக்குளம் பகுதியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம்.இவர் திருப்பூரில் கார் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ராமலட்சுமி. இந்த தம்பதியினருக்கு 15 வயதான மகனும் 8 வயதான பெண்ணும் உள்ளனர். இவர்கள் குடும்பத்தோடு திருப்பூரிலேயே வசித்து வருகின்றனர். தற்போது விடுமுறைக்காலம் என்பதால் சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் கல்யாணசுந்தரத்தின் மனைவி ராமலட்சுமி தனது வீட்டில் கொடூரமான முறையில் பல இடங்களில் வெட்டப்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். அதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் பயங்கர அதிர்ச்சிக்குள்ளாயினர். அண்டைவீட்டினர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் மானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

சடலமாக கிடந்த ராமலட்சுமியை மீட்ட போலீசார் போஸ்ட்மார்ட்டத்திற்கு அனுப்பினர்.இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டை நடப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் தனது மனைவி மீது தீராத சந்தேகம் கொண்ட கல்யாணசுந்தரம் அடிக்கடி சண்டையிட்டுள்ளார். ஊருக்கு வந்தும் சண்டை நீடித்ததாக கூறப்படுகிறது.

நேற்று நடந்த வாக்குவாதத்தில் மனைவியை கல்யாணசுந்தரம் வெட்டியிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் கல்யாணசுந்தரம் தலைமறைவாக உள்ளதால் அவர்தான் இந்த கொடூர செயலில் ஈடுபட்டிருப்பார் என போலீசார் தரப்பு தெரிவிக்கிறது. சந்தேகம் காரணமாக இளம்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரயும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.