ஏழை குழந்தைகள் முகத்தில் மகிழ்ச்சியை கொண்டு வந்த விஜய் டிவி தங்கதுரை.. இவர் தான் சார் கடவுள்..

0
Follow on Google News

விஜய் டிவியில் காமெடி நடிகராக வருபவர் தங்கதுரை. இவர் சொல்லும் பழைய ஜோக்குகள் எல்லாம் பிரபலமானவாயாக இருக்கின்றன. இவர் பழைய ஜோக்குகளுக்காக ஒரு புத்தகமே எழுதி வெளியிட்டுள்ளார். அந்த புத்தகமும் பிரபலமாக விற்பனையாகி வருகிறது. இதற்கிடையில் இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமாகி திரைப்படங்களில் கூட நடித்து வருகிறார்.

தங்கதுரை புதிய சொகுசு கார் வாங்கி இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சினிமா நடிகர்களை தொடர்ந்து விஜய் டிவி பிரபலங்களும் சொகுசு காரர்களை வாங்கி வருகின்றனர். ஏற்கனவே தொகுப்பாளினி மணிமேகலை மற்றும் உசேன் இதுபோல் சொகுசு கார் வாங்கி வீடியோ வெளியிட்டது நாம் அறிந்ததே. தற்போது அந்த வரிசையில் பழைய ஜோக் தங்கதுரை இணைந்துள்ளார்.

இவர் வாங்கிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 கார் பற்றி தான் இப்போது பலர் பேசி வருகிறார்கள். இது ஒரு எஸ்யூவி ரக காராகும். 5 சீட்டர் கொண்ட இந்த கார் ரூபாய் 68.50 லட்சம் முதல் விற்பனையாகி வருகிறது. மற்றும் மூன்று விதமான வேரியண்ட்களில் இந்த கார் விற்பனையாகி வருகிறது. இந்தியாவில் விற்பனையாகி வரும் சிறந்த பிஎம்டபிள்யூ காரில் இதுவும் ஒன்று.

நீல நிறத்தில் காஸ்ட்லியான BMW வாங்கியிருக்கும் தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நீண்ட பயணம் மற்றும் நிறைய போராட்டங்களுக்குப் பிறகு எனக்கு நானே இந்த காரை பரிசளித்துக் கொண்டேன். மேலும் இந்த சந்தோஷத்தை நான் தேவைப்படும் குழந்தைகளிடம் பகிர்ந்து கொண்டேன். அவர்களின் சந்தோஷமும் அன்பும் விலை மதிக்க முடியாதது. மேலும், உங்களின் அன்பிற்கும் சப்போர்ட்டிற்கும் நன்றி மக்களே என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து பேசிய தங்கதுரை, “என்னோட சின்ன வயசு ஏக்கங்களைத்தான், இப்போ இந்தக் குழந்தைகள் மூலமா நிறைவேற்றி இருக்கேன். எங்கூட பிறந்தவங்க மொத்தம் அஞ்சுப் பேர். அப்பா கூலித்தொழிலாளி. அவரோட ஒற்றை வருமானத்துலதான் படிச்சது, வளர்ந்தது எல்லாமே. வீட்ல டிவி கிடையாது. பைக்கும் கிடையாது. பக்கத்து வீட்லதான் பார்ப்போம்.

எங்கயாவது போறதுன்னாக்கூட லிஃப்ட் கேட்டுப்போவோம். அப்படியொரு வறுமையான சூழல். ஆனா, அந்தச் சூழலையே வைராக்கியமா எடுத்துகிட்டு எல்லோரும் நல்லா படிச்சோம். சின்ன வயசுலருந்தே கஷ்டத்தை மட்டுமே அனுபவிச்சதால ஏழைக் குழந்தைகளோட ஆசைகள், தேவைகள், வலி-வேதனை எல்லாமே தெரியும். அதனாலதான், புதுசா வாங்கின பிஎம்டபிள்யூ சன்ரூப் கார்ல குழந்தைங்களைக் கூப்பிட்டுப் போனேன்.

புது கார் வாங்கினதுமே சமூக ஆர்வலர் லோகநாயகி மேடம்கிட்டே என்னோட விருப்பத்தைச் சொன்னேன். ஏற்கெனவே, லோகநாயகி மேடம் கேட்டு நிறைய குழந்தைங்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டியிருக்கேன். இப்போவும், ரெண்டு குழந்தைங்களை மூணு வருஷமா படிக்க வெச்சுட்டு வர்றேன். அந்தப் பழக்கத்துல கேட்டவுடனே, லோகநாயகி மேடம் வியாசர்பாடிக்கு என்னைக் கூட்டிட்டுப் போனாங்க. பிஎம்டபிள்யூ காரைப் பார்த்ததும் குழந்தைங்க செம்ம ஹேப்பி ஆகிட்டாங்க.

இப்போ, நிறைய படத்துல நடிச்சுக்கிட்டிருக்கேன். முடிஞ்சவரைக்கும் ஏழைக் குழந்தைங்களுக்கு உதவணும்; படிக்கவெக்கணும்ங்கிறதுதான் ஆசை. அவங்க முகத்துல ஆனந்தத்தைப் பார்த்துக்கிட்டே இருக்கணும்” என்று பேசியுள்ளார். தங்கதுரை வியாசர்பாடி ஏழைக்குழந்தைகளை தனது பிஎம்டபிள்யூ காரில் அழைத்துச் சென்றதோடு துணிக்கடைக்குச் சென்று அவர்களுக்கு விருப்பமான உடைகளையும் வாங்கித்தந்துள்ளார்.