காசு கொடுத்த வாரேன்… வெளிப்படையா கேட்ட நடிகை… மேடையில் அம்பலப்படுத்திய தயாரிப்பாளர்..

0
Follow on Google News

ஹெச்.வினோத், ராஜபாண்டி உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஸ்ரீ வெற்றி. ‘நாற்கரப்போர்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். சதுரங்க விளையாட்டை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தில் அபர்ணதி ஜோடியாக லிங்கேஷ் நடித்துள்ளார். இதில் 12 வயது சிறுவனுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார் அபர்ணதி. நாற்கரப்போர் படத்தின் டிரைலர் லாஞ்ச் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். ஆனால் படத்தின் நாயகி அபர்ணதி மட்டும் பங்கேற்கவில்லை. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகை அபர்ணதியை பற்றி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். மேலும் அவர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்காததற்கான காரணத்தையும் கூறினார்.

அவர் பேசும் போது, “இந்தக்கதையை என்னிடம் வந்து முதலில் சொல்லும் பொழுது, கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்படிப்பட்ட ஒரு கதையை படமாக்கிய தயாரிப்பாளர் வேலாயுதத்துக்கு என்னுடைய வாழ்த்துகள். சினிமாவில் வெற்றி, தோல்வி என்பது மிகவும் சகஜமான ஒரு விஷயமாகும். நாம் நம்முடைய வேலையை சிறப்பாக செய்து இருக்கிறோமா என்பது தான் இங்கு முக்கியமானது. மற்றவை அனைத்தும் ரசிகர்கள் கையில்தான் இருக்கிறது.

இன்றைய தினத்தில், பெரிய பட்ஜெட் படம், சின்ன பட்ஜெட் படங்கள் என்றெல்லாம் பிரிக்க முடியாது. காரணம் என்னவென்றால், சின்ன பட்ஜெட் படங்கள் கூட இன்றைக்கு மிகப்பெரிய அளவில் வசூலை வாரி குவிக்கிறது. புதிதாக இங்கு படம் தயாரிக்க வரும் தயாரிப்பாளர்கள், முதல் படத்தில் சில கசப்பான சம்பவங்களை கண்டிப்பாக சந்திப்பார்கள். அது அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய அனுபவமாக மாறும்.

ஆனால் அதில் சில தயாரிப்பாளர்கள் சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கி விடுவதும் உண்டு. ஆனால், அப்படி செல்லக்கூடாது. விட்டதை விட்ட இடத்தில் இருந்துதான் நாம் எடுக்க வேண்டும். நீங்கள் சந்தித்த அனுபவம் உங்களுக்கான முதலீடு. அந்த வகையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் வேலாயுதம் புதிய தயாரிப்பாளராக இருந்தபோதும் கூட, மிக தைரியமாக,நேர்த்தியாக இந்த படத்தை ரிலீஸ் வரை கொண்டு நிறுத்தி இருக்கிறார் அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

இந்தப் படத்தில் நடிகர் லிங்கேஷ் நடிகை அபர்ணதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அவர் அபர்ணதி மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனால் இதில் வருத்தமான செய்தி என்னவென்றால் அபர்ணதி புரமோஷனுக்கு வரவில்லை. பிரமோஷனுக்கு அவரை அழைத்த போது, நான் வரமாட்டேன் ப்ரமோஷனுக்கு தனியாக காசு கொடுத்தால் மட்டுமே நான் வருவேன் என்று கூறினார். அது எங்களுக்கு மிகவும் புதிதாக இருந்தது.

அதுமட்டுமல்ல அவர் பிரமோஷனுக்கு வருவதற்கு சில நிபந்தனைகளையும் விதித்தார். அதை எல்லாம் இங்கு பேசினால் மிகப்பெரிய சர்ச்சையாக மாறிவிடும். மேடையில் அவர் யாருடன் உட்கார வேண்டும் என்பது வரை அதில் அடங்கியிருக்கிறது. மேலும் அவர் புரமோஷனுக்கு வர வேண்டும் என்றால், மூன்று லட்சம் கொடுக்க வேண்டும் என்று சொன்னார். உடனே நாங்கள் மூன்று லட்சம் உங்களுக்கு கொடுப்பதற்கு அதில் நாங்கள் படத்திற்கான பப்ளிசிட்டியை செய்து விடுவோம் என்று கூறி போனை வைத்து விட்டோம்.

இதையடுத்து நாங்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் அவர் குறித்து புகார் அளித்தோம். அவரிடமும் நீங்கள் நடிகர் சங்கத்தில் இது குறித்த புகார் அளியுங்கள். பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று கூறினோம். இறுதியில் அவர் நடிகர் சங்க உறுப்பினரே இல்லை என்பது தெரிய வந்தது. இரண்டு நாட்கள் கழித்து அவர் எங்களுக்கு கால் செய்தார். நான் தெரியாமல் பேசிவிட்டேன். நீங்கள் யார் என்பது எனக்கு தெரியாது என்று கூறினார். மன்னிப்பு கேட்டதுடன் பிரமோஷனுக்கு வருவதாகவும் சொன்னார்.

இதையடுத்து நான் இதற்கு மன்னிப்பு எல்லாம் கேட்க வேண்டாம். இந்த படத்தில் கொஞ்சம் முகம் தெரிந்த நபராக நீங்கள் இருக்கிறீர்கள்; நீங்கள் புரமோஷனுக்கு வரும் பட்சத்தில் படத்திற்கு உங்களால் கூடுதலாக பப்ளிசிட்டி கிடைக்கும் அதற்காகத்தான் கூறினேன் என்று சொன்னேன். இதையடுத்து அவர் வருகிறேன் என்று கூறினார் ஆனால் வரவில்லை. தயாரிப்பாளர் தரப்பு அவருக்கு கால் செய்த போது அவுட் ஆப் ஸ்டேஷனில் இருக்கிறார் என்று கூறி இருக்கிறார். அவர் அங்கேயே இருக்கட்டும் இப்படிப்பட்ட நடிகை எல்லாம் தமிழ் சினிமாவுக்கு தேவையே கிடையாது” என்று பேசினார்.