இந்த ‘வீரப்பட்டம்” கேவலத்திலும் கேவலம்… ஜல்லிக்கட்டு வீரர்களை இழிவு படுத்திய சினிமா பிரபலம்..

0
Follow on Google News

கடந்த 2017ம் ஆண்டு தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியை மீட்டெடுக்க தமிழகம் முழுவதும் மக்கள் தன்னெழுச்சியாக எழுந்து போராட்டதில் ஈடுபட்டனர். இதில் சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை உலகமே உற்று நோக்கி பார்க்கும் வகையில் அமைந்தது. அப்போது ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க காரணமாக இருந்த பீட்டாவுக்கு எதிராக தமிழக மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

பீட்டாவுக்கு இதற்கு முன்பு ஆதரவு தெரிவித்து வந்ததாக, சினிமா நடிகர், நடிகைகளுக்கு எதிராக மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு குரல் ஓங்கி ஒலித்தது. இதன் ஒரு பகுதியாக விஷால், திரிஷா போன்ற பீட்டா ஆதரவு நடிகர் நடிகைகளுக்கு செருப்பு மாலை அணிவித்து மக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இப்படி கடும் போராட்டத்திற்கு பின்பு மீட்டெடுக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கு மீண்டும் தமிழ் சினிமாவில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழ் திரைப்படம் பாடலாசிரியர் கவிஞர் தாமரை, ஜல்லிக்கட்டு போட்டியை கடுமையாக விமர்சனம் செய்தவர், அதில் கலந்து கொள்ளும் வீரர்களை இழிவு படுத்தும் விதத்தில் கருத்தும் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவிஞர் தாமரை ஜல்லிக்கட்டு குறித்து தெரிவிக்கையில், சல்லிக்கட்டு என்னும் விளையாட்டு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் ‘வீர விளையாட்டா’க இருந்திருக்கலாம், காலத் தொடர்ச்சியில் அது மரபாக மாறி விட்டிருக்கலாம். ஆனால், பலவகையான மரபுகள் குறித்து காலத்துக்குக் காலம் சிந்தனைகள் மாறிவருகின்றன என்பதை மறந்து விடலாகாது.

மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி மலர்ந்ததே அவ்வகைச் சிந்தனை மாற்றத்தினாலேயே ! விலங்குகளுக்கும் உணர்வு உண்டு, வாழும் ஆசை, உரிமை உண்டு எனும் சிந்தனை வளர்ச்சியால் ‘விலங்குரிமை’க் குரல்கள் எப்போதைக் காட்டிலும் இப்போது அதிகமாக எழுகின்றன. மனிதனை மனிதன் பொருதுவதே சரியல்ல என்றாலும் இருதரப்புக்கும் அதுகுறித்த தெளிவுண்டு என்கிற அளவில் நாம் அதைத் தடுக்கலாகாது.

ஆனால் ஐந்தறிவு கொண்ட, தன் தரப்பை எடுத்துரைக்க வாயில்லாத மாடு போன்ற உயிரினங்களோடு பொருதுதல் ‘விளையாட்டின்’பாற் படாது, ‘வினை’யின்பாற் படும். ஆயிரக்கணக்கானோர் கூடி ஆர்ப்பரிக்க, என்ன நிகழ்கிறது என்று தெரியாமல் திகைக்கும் மாட்டை நூற்றுக்கணக்கானோர் துரத்தி, இழுத்து, குத்தி, சாய்த்து ‘வீரப்பட்டம்’ வாங்குவது கேவலத்திலும் கேவலம் !

எந்த விளையாட்டிலும் இருதரப்புக்கும் விளையாட்டின் விதிமுறைகள் தெரியும், ஒப்புக்கொண்டு கையெழுத்திட்ட பிறகே விளையாட்டு தொடங்கும். ஆனால் சல்லிக்கட்டில் மறுதரப்பான மாட்டுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாது மிரள்கிறது, தன்னுயிரைக் காத்துக் கொள்ள ஓடித் தப்ப முயல்கிறது. மாட்டின் அனுமதியின்றி நிகழும் இது விளையாட்டில்லை, வன்முறை !

காளைமாடுகள் தேவை, வெளிநாட்டு சதி, வீர விளையாட்டு, தமிழ்ப்பண்பாடு, மரபு, இத்யாதி இத்யாதி… வாதங்கள் இனி எடுபடாது. தமிழ்ப் பண்பாட்டைக் காக்க வேண்டுமெனில், தமிழில் பேசிப் பழகுங்கள், அம்மா அப்பா என்று அழையுங்கள், குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுங்கள்…. விலங்குகளை விட்டு விடுங்கள்… அவை புல் பூண்டு இலை தழை பிண்ணாக்கு பருத்தி உண்டு பிழைத்துப் போகட்டும்… உங்களுக்காக அவை கொம்பு சீவத் தேவையில்லை !

சல்லிக்கட்டு தமிழருக்குத் தேவையில்லை, அதை வீர விளையாட்டாகக் கருதாமல் வன்கொடுமையாகக் கருதி, தடை செய்ய வேண்டுமென தமிழ்நாட்டரசைக் கேட்டுக் கொள்கிறேன். ஓரேயடியாக இல்லாவிட்டாலும், மக்களிடம் விலங்குரிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, படிப்படியாகக் குறைத்து காலப்போக்கில் இல்லாது ஒழிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பலருக்கும் சல்லிக்கட்டு தொடர்பாக இதுபோன்ற எண்ணம் இருக்கும், எனினும் வெளிப்படுத்தினால் தமிழ் எதிரியாகக் கருதப்படுவர் என்பதனால் மறைத்து வைத்திருப்பர். அவர்கள் தயவுசெய்து, இந்த நேரத்திலாவது முன்வந்து தங்கள் எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என சினிமா துறையை சேர்ந்த கவிஞர் தாமரை தெரிவித்துள்ளது தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடதக்கது.