ஏ.ஆர்.ரகுமான் விவகாரம்… இழப்பீடாக பத்து கோடி தரவேண்டும்… பறந்தது நோட்டிஸ்..

0
Follow on Google News

அண்மையில் சென்னையில் நடந்த ஏ.ஆர். ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடியால் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் நிகழ்ச்சியை பார்க்க அனுமதிக்கப்பவில்லை என புகார் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வழக்குப்பதிவு செய்த போலீசார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சர்ச்சைக்கு தானே பொறுப்பேற்ற ஏ.ஆர். ரஹ்மான் டிக்கெட் பணத்தை திரும்பி கொடுத்து வந்தார். மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி பிரச்சனை அடங்குவதற்குள் ஏ.ஆர். ரஹ்மான் மீது மற்றுமொரு புகார் எழுந்துள்ளது. பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீது இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், “தேசிய அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாட்டை, சென்னையில் கடந்த 2018, டிசம்பர் 26 முதல் 30-ம் தேதிவரை நடத்த திட்டமிட்டோம். அதில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை நடத்துவதற்காக அவருக்கு முன்தொகையாக ரூ.29 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தோம். ஆனால், நிகழ்ச்சி நடத்த இடமும் அனுமதியும் தமிழக அரசிடமிருந்து கிடைக்கவில்லை.

எனவே, முன்தொகையை திரும்பத் தரும்படி அவருக்கு கடிதம் அனுப்பினோம். ஏ.ஆர்.ரஹ்மான் அதற்கு ஒப்புக்கொண்டு, அந்த தொகைக்கான பின் தேதியிட்ட காசோலையை கொடுத்தார். ஆனால், சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கில் பணம் இல்லையென காசோலை திரும்ப வந்துவிட்டது. நாங்கள் கொடுத்த பணத்தைத் தரும்படி கடந்த 5 ஆண்டுகளாக ஏ.ஆர்.ரஹ்மானிடம் தொடர்ந்து கேட்டு வருகிறோம்.

ஆனால், இதுவரை எங்கள் பணம் திருப்பி தரப்படவில்லை. எனவே, ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது செயலாளர் செந்தில்வேலவன் ஆகியோர்மீது உரிய நடவடிக்கை எடுத்து, எங்களது பணத்தை திரும்பப் பெற்றுத்தர வேண்டும்” என்று புகார் மனுவில் கூறியிருந்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கறிஞர் ஷப்னம் பானு மூலமாக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டது. இந்நிலையில் அந்த நோட்டீஸூக்கு பதிலளிக்கும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் சார்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத் தற்போது அந்த சங்கத்துக்கு பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், இசைத்துறையில் பல்வேறு விருதுகளை பெற்று மதிப்புமிக்க நபராக உள்ள ஏ.ஆர்.ரஹ்மான் சமூகத்தில் பல தளங்களிலும் பல்வேறு நற்பணிகளை செய்துள்ளார் என்றும், அவரை பற்றி ASICON 2018 நிகழ்ச்சி நடத்திய இந்திய சர்ஜன் சங்கத்தால் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு அவரது நற்பெயரை கெடுக்கும் வகையிலும், உண்மைக்கு புறம்பாகவும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். அசிக்கான் அமைப்புடன் ரஹ்மான் எவ்விதத்திலும் தொடர்பிலோ? ஒப்பந்தத்திலோ? இல்லாத நிலையில், மலிவான விளம்பரத்திற்காக இதுபோன்ற குற்றச்சாட்டை கூறி உள்ளார்கள் என்றும் கடுமையாக சாடியுள்ளார்.

தனக்கு கொடுத்ததாக கூறப்படும் பணத்தை தான் பெறவில்லை என ரஹ்மான் கூறுவதாகவும், மூன்றாவது நபரிடம் பணத்தை கொடுத்துள்ள இந்திய சர்ஜன் சங்கம் தேவையில்லாமல் ரஹ்மான் பெயரை இதில் ஈடுபடுத்தி உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். ரஹ்மானுக்கு அனுப்பிய நோட்டீசை 3 நாட்களில் திரும்பப்பெற வேண்டும் என்றும், பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும்,

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சமூகத்தில் உள்ள நற்பெயருக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கான இழப்பீடாக 10 கோடி ரூபாயை தர வேண்டும் என்றும், தவறினால் சட்ட ரீதியாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் வழக்கறிஞர் நர்மதா சம்பத் அனுப்பியுள்ள நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.