ஆக்ரோசமாக நடந்து கொண்ட பா.ரஞ்சித்… பரிதாபத்தில் நடிகை மாளவிகா மோகன்…

0
Follow on Google News

பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘தங்கலான்’. இதில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.

படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் கடந்த 10ஆம் தேதி வெளியாகி பலரது கவனத்தை பெற்றது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. கே.ஜி.எஃப் எனும் கோலார் தங்க வயல் சுரங்கங்களில் அடிமைகளாக வேலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்வையும், அவர்களின் போராட்டங்களையும் மையப்படுத்திய கதை எனக் கூறப்படுகிறது.

இதற்காக கே.ஜி.எஃப் சுரங்கள் இருந்த பகுதிகளுக்கே நேராகச் சென்று படப்பிடிப்பு நடந்தது. தங்கமும், புழுதியும், ரத்தமும் கலந்து உருவாகியிருக்கும் இப்படத்தில் இதுவரை நடித்திராத வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன். இந்நிலையில் படத்திற்கான புரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக பிரபல தனியார் சேனலுக்கு தங்கலான் படத்தில் நடித்துள்ள நடிகைகளான மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி திருவேத்து இணைந்து பேட்டி கொடுத்தனர்.

அப்போது பேசிய நடிகை மாளவிகா மோகன். “இந்த படத்திற்காக ஒட்டு மொத்த படக்குழுவும் மிகவும் சிரமப்பட்டு உழைத்துள்ளது. எனது கதாபாத்திரம் மிகவும் குரூரமான கதாபாத்திரம் என்பதால், எனக்கான மேக்கப் என்பது மிகவும் பார்த்து பார்த்து செய்யப்பட்டது. குறிப்பாக எனது கதாபாத்திரத்திற்கான மேக்கப் என்பது, தோற்றத்திற்கான மேக்கப், டாட்டூ மேக்கப், பச்சை குத்தி இருப்பதைப் போன்ற ஒப்பனை, அதன் பின்னர் எனது ஆடைகள் என இதற்கே கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் எடுத்துக் கொள்ளும் என தெரிவித்த மாளவிகா மோகன்.

மேலும் படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில் ஒரு குடை கூட எங்களுக்குக் கிடையாது. மேக்கப் போடும்போது மிகவும் ஆர்வமாக இருக்கும். நடிக்கும்போதும் மிகவும் ஆர்வமாகவே இருந்தோம். கடும் வெயில் புழுதி குப்பைகளுக்கு மத்தியில் எல்லாம் நடிக்கும்போது எங்களுக்குத் தெரியவில்லை. படப்பிடிப்பை முடித்துவிட்டு, நாங்கள் ஹோட்டலுக்கு திரும்பிய பின்னர்தான் எங்களுக்கே தெரியும் கடும் வெயிலினால் எங்களது உடல் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்த மாளவிகா மோகன்.

மேலும், நான் ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்காக நான் கண்களில் லென்ஸ் போட்டு நடிக்கவேண்டியதாகப் போனது. இதனால் எனக்கு கண்களில் பார்வை பிரச்னை ஏற்பட்டது. அதேபோல் மேக்கப்பினால் தோல் தொடர்பான பிரச்னை ஏற்பட்டது. முகத்தில் தோல் பிரச்னை ஏற்பட்டது. இவற்றை எல்லாம் சரி செய்ய படப்பிடிப்புக்கு மத்தியில் நான் மொத்தம் ஐந்து மருத்துவர்களைச் சந்தித்தேன். ஷூட்டிங் முடிந்து ரூமுக்கு வரும்போது, உடலில் பல இடங்களில் காயங்கள் அடையாளங்கள் இருந்தது.

படப்பிடிப்பு தளத்தில் மேக் அப் போட்டு உட்கார்ந்து இருக்கும் போது எருமை ஒன்று இங்கும் அங்கும் அலைவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்த இயக்குநர் பா.இரஞ்சித், ‘உங்களுக்கு எருமையைப் பிடிக்குமா?’ என்று கேட்டார். நான் பிடிக்கும் என்று சொல்லிவிட்டேன். உடனே எருமையின் மீது உட்கார வேண்டும் என்று சொல்லிவிட்டார்.

விளையாட்டுக்குச் சொல்கிறார் என்று நினைத்தேன். பிறகு உண்மையிலேயே எருமையின் மீது உட்கார வைத்துப் படப்பிடிப்பு நடந்தது. முன்பே இதுபற்றி எனக்கு ஏதும் சொல்லப்படாததால் பயந்து போய் உட்கார்ந்திருந்தேன். இப்படிப் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் இப்படத்தில் நடந்திருக்கிறது. அனைவரும் இப்படத்திற்காகக் கடுமையாக உழைத்திருக்கிறோம்” என்று நடிகை மாளவிகா மோகன் தெரிவித்துள்ள நிலையில் தன்கலான் படத்தின் எதிர்ப்பார்ப்பு எப்படி இருக்கு உங்களுக்கு என்பதை மறக்காமல் கமெண்ட் செய்யுங்கள்.