நடிகை ரோஜாவின் ஆபாச வீடியோ விவகாரம்…. ரோஜாவுக்கு ஆதரவாக களத்தில் குதித்த சக நடிகைள்…

0
Follow on Google News

ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சராக இருப்பவர் நடிகை ரோஜா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப்படங்களில் நடித்துள்ளார். 1998 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த நடிகை ரோஜா, அக்கட்சியின் மகளிரணி தலைவியாக இருந்தார். நகரி மற்றும் சந்திரகிரி சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்ட ரோஜா தோல்வியை சந்தித்தார். தற்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அமைச்சரவையில் அமைச்சராக உள்ளார்.

ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு ‘ஊழல்’ வழக்கில் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தை ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினருக்கும், தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையேயான கருத்து மோதல்கள் ‘தனிமனித’ வாழ்க்கையை ஆபாசமாக விமர்சிக்கும் அளவுக்கு உச்சக்கட்டத்தை எட்டியிருக்கின்றன.

தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்யநாராயண மூர்த்தி, பிரபல நடிகையும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸைச் சேர்ந்த ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜா குறித்து அந்தரங்கமாக, இழிவாகப் பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். ‘‘ரோஜா ரெக்கார்டு டான்ஸ் ஆடினார். ஆபாசப் படத்தில் நடித்தார்’’ என வெளிப்படையாகக் கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்யநாராயண மூர்த்தி கைதுசெய்யப்பட்டு, பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

அவரது இந்த பேச்சுக்கு ஆந்திர மகளிர் ஆணையம் உட்பட பல்வேறு அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரோஜா, தெலுங்கு தேசம் கட்சியினர் பெண்களை விளையாட்டு பொருளாக பார்ப்பதாக குற்றம்சாட்டினார். உங்கள் வீட்டு பெண்களை இப்படி அவதூறாக பேசினால் ஏற்று கொள்வீர்களா என்றும் கண்ணீர்மல்க கேள்வி எழுப்பினார்.

தன்னை பற்றி தரம் தாழ்த்தி பேசியவுடன் சத்யநாராயண மூர்த்தியை அவரது மனைவி செருப்பால் அடித்திருக்க வேண்டும் என ஆவேசத்துடன் கூறினார். நான் ஆபாச படத்தில் நடித்தவள் என்றால், என்னை ஏன் சந்திரபாபு நாயுடு கட்சியில் சேர்த்தார் என பேசிய ரோஜா, உங்கள் கட்சியில் இருந்தபோது நல்லவளாக தெரிந்த நான், வேறு கட்சிக்கு சென்றவுடன் எப்படி கெட்டவளாக மாற முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்

தனது அரசியல் வளர்ச்சியை கண்டு அஞ்சும் தெலுங்கு தேசம் கட்சி இவ்வாறு செயல்படுவதாகவும், பண்டாரு சத்ய நாராயண மூர்த்தி மீது மானநஷ்ட வழக்கு தொடரவுள்ளதாகவும் ரோஜா ஆவேசத்துடன் கூறினார். சமீபத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு சிறையில் அடைக்கப்பட்டதை கேக் வெட்டி கொண்டாடினார் நடிகை ரோஜா. அதன்பிறகு, தெலுங்கும் தேசம் கட்சியினர் நடிகை ரோஜாவை தாக்கி பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோஜாவின் பேட்டி ஆந்திராவில் அதிர்வலைகளை உருவாக்கிய நிலையில் மதிப்பிற்குரிய அமைச்சரும், நடிகையுமான ரோஜாவுக்காக நான் ஆதரவாக இருப்பேன் என நடிகை ராதிகா வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில், “ஒரு தோழியாக, நடிகையாக, அரசியல் தலைவராக ரோஜாவின் தைரியம் எனக்கு தெரியும். கடந்த இரண்டு நாட்களாக ரோஜாவுக்கு எதிராக தரம் தாழ்ந்த அரசியல் கருத்து பகிரப்பட்டு வருகிறது. அது மிகவும் வருத்தமளிக்கிறது.

ஒரு அமைச்சரை புளூ பிலிமில் நடித்தவர் என்றும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி உள்ளது என கடுமையாக பதிலடி கொடுத்துள்ள ராதிகா, பெண்களை விபச்சாரி என்று சொன்னாலோ, ப்ளூ பிலிமில் நடித்திருக்கிறார் என்று அவரது கேரக்டரை அசிங்கப்படுத்தினால் பெண்கள் பயந்து விடுவார்கள் என்று நினைத்தீர்களா? நீங்கள்தான் வெட்கப்பட வேண்டும் என்று விட்டு விளாசியுள்ளார் ராதிகா.

இந்த நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் ’இந்தியா என்ற தாயை பெண்ணாக மதித்து நாம் கொண்டாடி வருகிறோம். ஆனால் அதே நாட்டில் இதுபோன்ற விஷயங்கள் நடக்கிறது. ரோஜாவை மோசமாக விமர்சனம் செய்த அந்த நபரை சும்மா விடக்கூடாது, மன்னிக்கக் கூடாது, நான் ரோஜாவுக்கு துணை நிற்கிறேன். இது குறித்து பிரதமர் மோடி அவர்கள் தலையிட்டு சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசி உள்ளார்.