ஜெய்பீம் விவகாரம்…சூர்யாவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

0
Follow on Google News

2021ம் ஆண்டு நவம்பர் மாதம் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த படம் ஜெய்பீம். சூர்யாவின் 2D என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிய இந்த படத்தில், மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ராஜிஷா விஜயன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்தனர். படத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு மீது, பொய் வழக்கு போட்டு போலீசார் அடித்து துன்புறுத்தியதையும், ராஜாக்கண்ணுவின் மனைவி செங்கேணிக்கு நீதி கோரி குரல்கொடுக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் போராட்டத்தையும் தெளிவாக காட்டியிருப்பார் இயக்குனர் ஞானவேல்.

இத்தகைய அருமையான கதைக்களத்துடன் சூர்யா, மணிகண்டன் போன்ற நடிகர்களின் சிறப்பான நடிப்பில் வெளியாகிய ஜெய்பீம் படத்தை பெரும்பாலான மக்கள் வரவேற்றனர். அதுமட்டுமின்றி, ஜெய் பீம் படத்தில் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் மணிகண்டனுக்கும் கதாப்பாத்திரத்தை உள்வாங்கி நடித்திருந்த நடிகை லிஜோமோலுக்கும் திரையுலக பிரபலங்களிடம் இருந்தும் ரசிகர்களிடமிருந்தும் ஏராளமான பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்தன.

ஒரு பக்கம், தாழ்த்தப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எடுத்துரைக்கும் ஜெய்பீம் படம் ஏராளமான விருதுகளையும் வென்று குவித்தது. மறுபக்கம், ஜெய்பீம் படத்தில் குறவர் இன மக்களை இழிவுப்படுத்தியதாக புகாரும் எழுந்தன. மிகப்பெரிய வெற்றியைக் கண்ட ஜெய்பீம் படத்தில், குறவர் சமூகத்தை தவறாக சித்தரிக்கும் நோக்கத்தில் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக கூறி, கடந்த 2021ல் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகரான சூர்யா மீதும், இயக்குநர் த.செ.ஞானவேல் மீதும் குறவர் நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் முருகேசன் தரப்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த புகாரை ஏற்க மறுத்து எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், மீண்டும் எழும்பூர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகேசன் மனுதாக்கல் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மனுதாரர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், நடிகர் சூர்யாவும் இயக்குனர் ஞானவேலும் பதிலளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி கூறிய நீதிபதி, வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார். ஏற்கனவே, இதேபோல ஜெய்பீம் படத்தில் குறிப்பிட்ட சமூக மக்களின் மனதை புண்படுத்தும் விதமாகவும், வெறுப்பை தூண்டும் விதமாகவும் படத்தில் சில காட்சிகள் இடம்பெற்றதாக சிலர் குற்றச்சாட்டுகளை வைத்திருந்தனர்.

அதாவது அந்த குறிப்பிட்ட சமூகத்தினரை சுட்டிக்காட்டும் வகையில், படத்தில் அக்னி குண்டமும், மகாலட்சுமி புகைப்படமும் இடம்பெற்றதாக கூறி சூர்யா மற்றும் ஞானவேல் ராஜா உள்ளிட்டோருக்கு எதிராக ருத்ர வன்னியர் சேனா அமைப்பினர், நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்திருந்தனர். இதன் காரணமாக படத்தில் இடம்பெற்றிருந்த அக்னி குண்டம் காட்சி நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.