எல்லாம் மறந்துவிடும் என்று நினைக்காதீர்கள்… கமலுக்கு எதிராக கொந்தளித்த மாரி செல்வராஜ்..

0
Follow on Google News

நடிகர் கமல்ஹாசனுக்கு பல வருடங்களுக்கு முன்பு இயக்குனர் மாரிசெல்வராஜ் எழுதிய கடிதம் என்று தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, அந்த கடிதத்தில் “நடிகர் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களுக்கு ஒரு சேரிப்பையனின் பகிரங்க கடிதம், வணக்கம் எனக்கு 8 வயசாகும்போது என் கண்முன்னே எங்கள் வீடு எரிந்துகொண்டிருந்த நடு இராத்திரி ஒன்றில் எழுத நினைத்த கடிதம். வெகு காலதாமதம் ஆகிவிட்டது இந்த இருக்கையும் கணிப்பொறியும் எனக்கு கிடைப்பதற்கு.

தேவர்மகனில் தொடங்கி உன்னைபோல் ஒருவன் வரை பார்த்தாகிவிட்டது உங்கள் பூனூல் முற்போக்குதனத்தையும் அதிகார அறிவின் அட்டகாசத்தையும் இனிமேலும் பொறுத்துக்கொண்டிருக்க நான் ஒன்றும் என் அப்பன் செல்வராஜோ என் தாத்தன் நொண்டிபெருமாளோ இல்லை மூன்றாம் தலைமுறை நான். சமீபத்தில் நண்பர் ஒருவர் மூலம் இணையதளத்தில் சண்டியர்க்கு ஆதரவாக நீங்கள் போதையில் ஆற்றிய முற்போக்கு உரையை பார்த்தேன் சரி அதற்கு அப்புறம் வருவோம்.

முதலில் முற்போக்குவாதி, பூனூல் துறந்த பிராமணன், பெரியாரின் கொள்கையை கடைபிடிப்பவர் என்றெல்லாம் சொல்லிகொள்ளும் நீங்கள் பல பிரிவு மக்கள் பல அடுக்கு சாதி கூறுகளுடன் வாழும் நம் நாட்டில் ஒரு சாதி மக்களின் வாழ்க்கை முறையை, அவங்க அரிவாள் பிடித்த முறையை, அவர்கள் அரிசனனுக்கு சந்தோசமாய் கூழ் ஊத்திய முறையை, மீசை முறுக்கி வளர்த்த முறையை, சாராயம் குடித்த முறையை, சக மனிதனின் சங்கறுத்த முறையை காட்டுகிறேன் என்று “தேவர் மகன் “என்ற தலைப்போடு ஒரு திரைப்படம் எடுத்தது ஏன்?

ஒரு பிரிவு மக்களின் வன்முறையை ஆதிக்கத்தை அவர்களின் அறியாமையை காட்டி அவர்களை உசுப்பேத்திவிடவா, இல்லை அவர்களின் சாதிய வேல்கம்புகளுக்கு கூர் தீட்டிவிடவா? அல்லது எப்போதும்போல மீசை முறுக்க ஆசைபட்டு பணம் சம்பாதிக்கவ? அது எப்படி “போற்றிப் பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே” இதன் விளைவையும் வலியையும் இன்றுவரை நீங்கள் உணர்ந்ததுண்டா?

சொல்கிறேன் கேளுங்கள் ஒருவேளை நீங்கள் அசட்டுபோதையில் இருந்தாலும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். ஆறாம் வகுப்பு மாணவர்கள் கூட பள்ளிகளில் அடித்துக்கொண்டார்கள், திருமண சடங்கு விசேச வீடுகளில், ஏன் கோவில்களில் கூட உங்களின் முற்போக்கு பாடல் ஒலித்து கிராமங்களின் ஒற்றுமையை ஆடவைத்தது. வெள்ளரிக்காய் விற்கும் வயதான மூதாட்டிக்கூட வலுகட்டாயமாக பாட வைக்கபட்டாள். எங்களுக்கெதிரான உற்சாகத்துடன் மீசைகள் முறுக்கபட்டன. வேட்டிகள் மடித்து அதிகார ஆணவத்தோடு கட்டபட்டன என அந்த நீண்ட கடிதத்தில் பல விஷயங்களை குறிப்பிட்ட மாரி செல்வராஜ்.

மேலும் இறுதியாக அந்த கடிதத்தில், கடைசியாக திரு.கமலஹாசன் அவர்களே! நீங்கள் கருப்பு சட்டை அணிவதால் உங்களின் ஆரிய வெள்ளைத்தோல் எங்களுக்கு மறந்துவிடும் என்று நினைக்காதீர்கள். பூனூலை நீங்கள் துறந்திருக்கலாம் ஆனால் உங்களின் தலைமுறையின் பூனூல் தடம் உங்களை விட்டு போகவில்லை என்பது எங்களுக்கு தெரியாமல் இல்லை.

உண்மையிலே நீங்கள் ஒரு சிறந்த நடிகர் என்பதை எல்லாராலும் ஏற்றுக்கொள்ளபட்டுவிட்டீர்கள் அப்புறமென்ன நீங்கள் பணம் சம்பாதிப்பதற்கும், பாதுகாப்பாய் இருப்பதற்கும் சகலகலாவல்லவனும் அவ்வைசண்முகியும், தசாவதாரமும் போதுமே. உங்களின் ஆரிய முற்போக்கை அம்பலபடுத்தும் உன்னைபோல் ஒருவனும் , சாதி வாழ்வை காட்டி மக்களை பிரித்துக்காட்டும் தேவர்மகனும் , விருமாண்டியும் எதற்கு… கமல் அவர்களே,

உங்களுக்கு திரைக்கதை சாதாரணமாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு எங்கள் வாழ்வியலில் நாங்கள் வாழும் வாழ்க்கை முறை அசாதரமானது என்பதை தயவுசெய்து கொஞ்சம் கருத்தில் வையுங்கள். இப்படிக்கு, இன்னும் சேரி என்ற சொல்லும் வாழும் உங்கள் நாட்டில் இருப்பதால் சேரிப்பையன் – மாரிசெல்வராஜ்” என்று அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.