சென்னை வெள்ளத்தில் சிக்கி கொண்ட அமீர் கான்… கடவுள் போல் உதவி செய்த அஜித்…

0
Follow on Google News

சென்னை காரப்பாக்கத்தில் மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் பாலிவுட் நடிகர் அமீர்கான் ஆகியோரை நேரில் சந்தித்த நடிகர் அஜித் அவர்களின் நலம் விசாரித்ததோடு, போக்குவரத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளார். மேலும் மூவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து, வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று மிக்சாம் புயலாக உருவெடுத்தது. கடலில் உருவான புயலின் காரணமாக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இடைவிடாது வட தமிழகத்தை வெளுத்து வாங்கிய மழையால், ஏரிகள், நீர் பிடிப்பு பகுதிகள் நிரம்பி வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது.

மேலும் அடையாறு, கொசஸ்த்தலை ஆறு போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோரம் வசித்து வந்த மக்களும் பாதிக்கப்பட்டனர். புயலின் காரணமாக கடலில் சீற்றம் குறையாமல் அலைகள் கொந்தளிப்பில் இருந்ததால், மழையால் ஏற்பட்ட வெள்ள நீரை கடலாலும் உள்வாங்க முடியவில்லை. இதனால் சென்னை முழுவதும் வெள்ள நீரில் தத்தளித்து வந்தது.

மழை நீர் வீட்டிற்குள் புகுந்ததால், மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. குடியிருப்பு பகுதிகள் மட்டுமின்றி, பிரதான சாலைகளிலும், சுரங்கப்பாதைகளிலும் வெள்ள நீர் ஆறு போல் ஓடியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு, மக்கள் அத்தியாவசிய பொருளை கூட வாங்க முடியாமல் சிக்கி தவித்தனர்.
இருப்பினும், மாநகராட்சி பணியாளர்கள், மீட்பு குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் உணவு, தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை வீட்டில் தஞ்சம் அடைந்த குடியிருப்பாளர்களுக்கு வழங்கி உதவி செய்தனர். அதேசமயம் மீட்பு குழுவினர் படகுகள் மூலமாக மக்களை மீட்டு பாதுகாப்பான முகாம்களுக்கு அனுப்பி வைத்தனர்.

இப்படியான சூழலில், சென்னை காரப்பாக்கம் பகுதியில் வசித்து வந்த நடிகர் விஷ்ணு விஷால், தனது குடியிருப்பிற் சுற்றி மழை வெள்ளம் சூழ்ந்திருப்பதாகவும், வயதானவர்கள் பெண்கள் உட்பட பலரும் சிக்கி தவிப்பதாகவும் கூறி வீட்டின் மொட்டை மாடியில் இருந்து வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். அவரது இந்த பதிவு இணையத்தில் வைரல் ஆகியது.

அதைத்தொடர்ந்து, அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் அங்கிருந்த விஷ்ணு விஷால் மற்றும் அமீர்கான் ஆகியோரை பத்திரமாக மீட்டனர். மேலும் அப்பகுதியில் சிக்கித் தவித்த 30-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களையும் மீட்டு பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளனர். பாதுகாப்பான இடத்திற்கு வந்த நடிகர் விஷ்ணு விஷால் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், நடிகர் அஜித் வெள்ளத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்ட விஷ்ணு விஷால் மற்றும் அமீர்கான் ஆகிய இருவரையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அப்போது மூவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை விஷ்ணு விஷால் சோசியல் மீடியாவில் பகிர்ந்தார். அதுமட்டுமில்லாமல், நடிகர் அஜித் வில்லா கம்யூனிட்டி உறுப்பினர்களுக்கு போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து கொடுத்ததாகவும் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். மேலும் அஜித் சாரின் இந்த உதவிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.