கடற்கரையில் குளித்து கொண்டிருந்த பெண் தீடிர் கூச்சல்..! பின் நடந்தது என்ன.? திருச்செந்தூரில் நடந்த பரபரப்பு சம்பவம்…

0
Follow on Google News

திருச்செந்தூர் கடற்கரையில் ஒரு ஓரமாக நின்று கடலில் குளித்துக் கொண்டிருந்தார் திண்டுக்கல்லை சேர்ந்த அங்கயற்கண்ணி. அப்போது அவர் அணிந்திருந்த ஐந்து பவுன் தங்கத் தாலி, எப்படியோ அவரையும் அறியாமல் கழுத்திலிருந்து நழுவி கடலுக்குள் விழுந்து விட்டது. “ஓ…” என்று கத்தினார் அந்தப் பெண். என்ன செய்வதென்று தெரியாமல் பதறித் துடித்தார் அருகில் நின்றிருந்த கணவர் மதுசூதனன்.

இவர்கள் எழுப்பிய கூக்குரலை கேட்டு அருகில் நின்ற அனைவரும் ஓடி வந்தனர். “என்னம்மா ஆச்சு..?” என்றனர், “5 பவுன் தாலி… கடலுக்குள் விழுந்துடுச்சுங்க..!” என மூச்சிரைக்க அங்கயற்கண்ணி சொல்ல, அடுத்த நொடியே அந்த பதட்டமும் பரபரப்பும் அங்கே நின்றிருந்த அத்தனை பேரையும் தொற்றிக் கொண்டது. அந்தப் பெண்ணின் ஐந்து பவுன் சங்கிலியை தேடும் முயற்சியில் அனைவருமே தீவிரமாக ஈடுபட்டார்கள்.

நேரம் ஆக ஆக கரையில் தேடிக் கொண்டிருந்தவர்களின் நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது. கடல் அலைகளின் சீற்றம் கூடிக்கொண்டே போனது. அவ்வளவுதான். இனி அந்த தாலிச் சங்கிலி கிடைக்க வாய்ப்பில்லை என்று அங்கிருந்தவர்கள் சொன்னதும் அந்தப் பெண் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்.
அருகில் நின்ற கணவனும் கூட கண் கலங்கினார். இருவரும் கலங்கியபடி புலம்பினார்கள். “ஏற்கனவே குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள். அதற்காகத்தான் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தோம்.

வந்த இடத்தில் இப்படி ஒரு பிரச்சனை…” மதுசூதனன் தன்னுடைய கண்களை துடைத்தபடி தன் மனைவியை பார்த்து சொன்னார். “எங்கே போனாலும் நம்முடைய விதி நம்மை விடுவதில்லை. சரி வா, நாம் ஊருக்கு புறப்படலாம் என்றார் மதுசூதனன். ஆனால் “அங்கயற்கண்ணி இன்னும் அதிகமாக அழுதபடி, “மாட்டேன். என்னுடைய தாலி கிடைக்கும்வரை யார் என்ன சொன்னாலும் நான் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன்.” என்றார்.

அந்த நகை கடலுக்குள் விழுந்து பல மணி நேரம் ஆகிவிட்டது. அந்த தாலியை எந்த அலை எங்கே கொண்டு போனதோ… யாருக்குத் தெரியும் ? ஒரு வேளை கடற்கரையில் நின்றிருந்த அந்தக் கூட்டத்தில் யாரோ ஒருவரின் கையில் அந்த சங்கிலி கிடைத்திருந்தாலும் கூட அவர் திரும்ப கொண்டு வந்து கொடுக்கவா போகிறார் ? வாய்ப்பே இல்லை இல்லை என அங்கிருந்தவர்கள் பேசி கொண்டனர். ஆனால், முழு நம்பிக்கையோடு சொன்னார் அங்கயற்கண்ணி. “கிடைக்கும். நிச்சயமாக கிடைக்கும். எப்படியாவது எனக்கு என் தாலி கிடைக்கும்.” என்றார்.

இந்த நேரத்தில் மதுசூதனனுக்கு தற்செயலாக ஒரு ஃபோன் கால். திண்டுக்கல்லில் இருந்து நண்பர் ஒருவர் அழைத்தார். மிக மிக முக்கியமான பிரமுகர் அவர்.அவரிடம் மதுசூதனன், தான் திருச்செந்தூர் வந்திருப்பதாகவும் இங்கே தனக்கு ஏற்பட்டிருக்கும் இக்கட்டான சூழ்நிலையையும் எடுத்துச் சொன்னார். விஷயத்தை முழுவதும் கேட்ட நண்பர், “ஒன்று செய்யுங்கள் மதுசூதனன். நேரடியாக போலீஸ் ஸ்டேஷன் போய் புகார் செய்யுங்கள். தேவைப்பட்டால் என்னுடைய பெயரையும் சொல்லுங்கள்.”

அடுத்த நிமிடமே காவல்நிலையம் போனார் மதுசூதனன். விஷயத்தைக் கேள்விப்பட்ட போலீசார் கடற்கரைக்கு விரைந்து வந்தார்கள். உடனடியாக கடலில் சிப்பி சேகரிக்கும் தொழிலைச் செய்யும் ஆட்களை வரவழைத்தார்கள். சுமார் 50 பேர் முழுமூச்சாக கடலில் இறங்கி தேட ஆரம்பித்தார்கள். அந்தப் பெண் அங்கயற்கண்ணி கடற்கரையோரமாக நின்று கைகளைக் குவித்து கண்ணீர் வடித்தபடி முருகனுக்கு எத்தனை பெயர்கள் உண்டோ, அத்தனையையும் சொல்லி மனமுருக வேண்டிக் கொண்டு இருந்தார்.

இடைவிடாமல் முருகனின் பெயர்களை உச்சரித்துக்கொண்டிருந்த அந்தப் பெண்ணின் குரலை மிஞ்சும் விதமாக உரத்த குரலில் கத்தினார் ஒருவர். “கிடைச்சிடுச்சு… நகை கிடைச்சிடுச்சு..!” எல்லோர் கண்களும் குரல் வந்த திசையை நோக்கித் திரும்பின. கையில் அந்த ஐந்து பவுன் தங்க சங்கிலியை உயர்த்திப் பிடித்துக் கொண்டு, கடலில் இருந்து கரையை நோக்கி ஓடி வந்தார் ஒருவர். பளிச்சென அவரின் கையில் மின்னியது அந்தப் பெண்ணின் தாலி.

பேச முடியாமல் அந்தப் பெண்ணின் குரல் உடைந்து போனது. “நன்றி நன்றி நன்றி” என்று திரும்பத் திரும்பச் சொல்லி கண்ணீர் வடித்து கொண்டிருந்தார். காவல்துறையினர் கூட அந்த மனிதருக்கு நன்றி சொன்னார்கள். ஒரு போலீஸ்காரர் அவரிடம் கேட்டார். “வெரிகுட், எப்படியோ ஒருவழியாக அந்தப் பெண்ணின் நகையை தேடிக் கண்டுபிடித்து எடுத்து கொடுத்துட்டீங்க… ஆமா…உங்கள் பெயர் என்ன ?” என்று கேட்க. நனைந்திருந்த ஈர தலையை துவட்டி கொண்டே அந்த மனிதர் அமைதியாகச் சொன்னார்.”சரவணன்..!” என்று.

நகையை பறிகொடுத்த அங்கயற்கண்ணியின் கைகளில் அந்த ஐந்து பவுன் தாலி செயின் ஒப்படைக்கப்பட்டது. அந்த கூட்டத்தின் முன்னிலையிலேயே அங்கயற்கண்ணியின் கழுத்தில் அந்த தாலியை கட்டினார் கணவர் மதுசூதனன். கோவிலுக்கு உள்ளே சென்று திருச்செந்தூர் முருகனுக்கு ஒரு பவுன் தங்கச்சங்கிலியை காணிக்கையாக செலுத்தினார்கள் அந்த குடும்பத்தினர். புன்னகை பூத்த முகத்துடன் அந்தப் பெண் எல்லோருக்கும் நன்றி சொன்னார். எல்லோருமே புன்னகைத்தார்கள்.