என்ன ஆகும் தென் ஆப்பிரிக்கா தொடர்… இன்று நடக்கிறது பிசிசிஐ மீட்டிங்!

0
Follow on Google News

தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அங்கு இந்திய அணி விளையாட செல்லுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர் டிசம்பர் 17 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி டிசம்பர் 8 ஆம் தேதி தென் ஆப்பிரிக்கா செல்ல இருந்தது.

இப்போது இந்தியா ஏ அணி தென் ஆப்பிரிக்காவில் பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் தடுப்பூசிக்கு எதிராக செயல்படும் என்பதால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தென் ஆப்பிரிக்காவோடு போக்குவரத்து தொடர்பைத் துண்டித்துள்ளன.

இந்நிலையில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று கிரிக்கெட் தொடரை விளையாடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ‘இப்போதே அதுகுறித்து முடிவு எடுக்க முடியாது’ என்று கூறியிருந்தார். இந்நிலையில் இப்போது ஒமைக்ரான் வைரஸ் மிதமான நோய்த்தாக்குதலையே ஏற்படுத்துகிறது என சொல்லப்படுகிறது.

பிசிசிஐ தரப்பில் இருந்து வெளியாகியுள்ள தகவலில் ‘இந்திய அணி தனி விமானத்தில் தென் ஆப்பிரிக்கா சென்று அங்கு தங்களை பயோபபுளில் ஈடுபடுத்திக் கொள்ளும்’ என சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் மத்திய அரசு தரப்பில் இருந்து அனுமதி கிடைக்கவில்லை என்பதால் அதற்காக காத்திருக்கிறது. இந்நிலையில் இன்று மதியம் பிசிசிஐ செயற்குழு கூட்டம் மும்பையில் நடக்கிறது. அதில் தொடருக்கு இந்தியா செல்வதற்கான அனுமதி வழங்கப்படும் என சொல்லப்படுகிறது.